புதன், 7 ஆகஸ்ட், 2013

காயம்


இன்றைக்கு நாம் அவ்வப்போது எதிர்கொள்கிற சமாசாரம் பார்க்கலாம். இதில் சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவற்றை கையாள உதவியாக இருக்கும்.
யாரும் வாழ்கையில் அடி படாமல் இருக்க மாட்டார்கள். சிலர் சின்ன அடிக்கே குய்யோ முறையோ என்று ஊரை கூட்டுவார்கள். சிலர் பெரிய அடி பட்டு ரத்தம் வந்தால் கூட தட்டிவிட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள்!

எப்போதுமே உடம்பு தேவையான நடவடிக்கையை எடுத்துக்கொண்டே இருக்கிறது. அது சில சமயம் மட்டும் நமக்கு பிரச்சினை தருவதாக அமையும். பல சமயங்களில் அது சரியாகவே இருக்கும். அது நமக்கு புரிவதில்லை.

மருந்து சாப்பிடுவது எல்லாம் உடம்புக்கு ஒரு கூடுதல் சப்போர்ட்தானே ஒழிய முக்காலே மூணு வீசம் உடம்பேதான் தன்னைத்தானே சரி செய்து கொள்கிறது.
கீழே விழுகிறோம் அடி பட்டு விடுகிறது. மேல் காயம் இல்லாவிட்டால் செய்யக்கூடியது ஐஸ் பேக் வைப்பதுதான். இல்லையானால் குளிர்ந்த நீர். இது அங்கே ஏற்படக்கூடிய வலியையும் வீக்கத்தையும் குறைக்கும்.

ரத்தம் கசிந்தால் என்ன செய்வது?
பயமே வேண்டாம்.
அதன் மேலே ஏதேனும் துணி, காகிதம் எதுவும் இல்லாவிட்டால் நம் கையையே கூட - வைத்து நன்றாக அழுத்த வேண்டும். சுமார் 2 நிமிடங்கள் கழித்து அழுத்தத்தை நீக்கி விட்டு பார்த்தால் அனேகமாக ரத்தப்போக்கு நின்றிருக்கும். உடம்பில் முக்கிய தமனியான அயோர்டாவும் அதன் நேரடி கிளைகளும் தவிர அழுத்தத்துக்கு நிற்காத ரத்த நாளம் கிடையாது! சிரை (vein) அல்லாமல் தமனி (artery) ஏதேனும் வெட்டுப்பட்டால் கூடுதல் நேரம் தேவைப்படலாம் அவ்வளவே!

இந்த அழுத்தம் சரியாக கொடுக்கப்பட வேண்டும். உதாரணமாக கத்திக்குத்து காயம் வயிற்றுக்குள் ஏற்பட்டால் வெளியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் சரியாக இராது. அதனால் இப்படி வேலை செய்யாது.

சில இடங்களில் ஏற்படும் காயம் அபரிமிதமாக ரத்தப்போக்கை உருவாக்கும். பொதுவாக தலை, முகம் ஆகியவற்றில் ஏற்படும் காயங்கள் இந்த வகையை சேர்ந்தவை. பொதுவாக எங்கும் காயம் ஏற்பட்டால் பரபரவென்று தேய்த்து விடுவது பரவலான பழக்கம். அது ரத்தப்போக்கை நிறுத்தாது. மாறாக அதிகமாக்கலாம்.

படிப்பு முடித்து ஒரு வருஷம் ஒரு நர்சிங் ஹோமில் வேலை பார்த்தேன். ஒரு நாள் மதிய நேரம் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஒரு அம்மா அரக்க பரக்க ஓடி வந்தார்கள். அவருடைய சேலையெல்லாம் ரத்தம். குழந்தை தலையை மூடிய வெள்ளை துண்டு சிவப்பாக மாறி இருந்தது. அழுதுக்கொண்டு இருந்த குழந்தையையும் அம்மாவையும் சமாதானப்படுத்தி உக்கார வைத்து விசாரித்ததில் குழந்தை கீழே விழுந்து தலையில் அடிபட்டுக்கொண்டதாக தெரிந்தது. துண்டை எல்லாம் துக்க்கிப்போட்டு விட்டு பார்த்ததில் எங்கும் ரத்தப்போக்கை காணோம்! ஒரு சீப்பு கொண்டு வரச்சொல்லி தலை முடியை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி காயத்தை கண்டு பிடித்தேன். சுமார் 2 மி.மீ தான் இருந்தது. ரத்தப்போக்கும் நின்று இருந்தது. எல்லாம் சரியாகிவிட்டது என்று அந்த அம்மாவை நம்ப வைக்க நிறையவே பாடுபட வேண்டி இருந்தது. இவ்வளோ சின்ன காயம் எப்படி அவ்வளவு ரத்தம் வர முடியும் என்று கேள்வி! வந்ததே! என்ன செய்வது?

காயத்தில் ரத்தம் வந்துவிட்டால் காயம் சீக்கிரம் ஆறிவிடும். சில சமயம் மேல் தோல் மட்டும் வழண்டு போய் ரத்தம் வராமலே இருக்கும். இதுக்குத்தான் இன்னும் அதிக கவனம் கொடுத்து மருந்து போட்டு மூட வேண்டும். சுலபமாக இன்பெக்ட் ஆகிவிடும். காயங்களில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேன்டும் என்று ஒரு கருத்து இருக்கிறது. அபப்டி இல்லை, ஈரமாகவே இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயத்தை 3 ஆம் நாளில் இருந்து சோப் போட்டு கழுவலாம், தொட முடிந்தால்! :-) சுத்தப்படுத்திவிட்டு காய வைக்க வேண்டும். காயம் ஈரப்பதத்துடன் இருக்கும் வரை மேலே ட்ரெஸ்ஸிங் போடலாம். காய்ந்த பிறகு தேவையில்லை. காயும் போது பொருக்கை பிய்த்து போட கை பரபரத்தாலும் அதை செய்யக்கூடாது. தோல் நகரும் இடங்களான கை கால் முட்டிகளில் காயம் ஆற நாளாகும். பொறுமை வேண்டும். வயதானவர்கள் ஒரு வாரத்துக்குள் காயம் ஆறும் அறிகுறி இல்லை என்றால் சர்க்கரை அளவை சோதிக்க வேண்டும். டயபெடிஸ் திருட்டுத்தனமாக வந்து இருக்கலாம்!

4 கருத்துகள்: